Subscribe:

Thursday, February 16, 2012

0
முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை
கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு
அங்கே
பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன
நாம்
‘எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்று
விசாரித்துக்கொண்டிருக்கின்றோம்.

அங்கே
குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன
நாம்
பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக்கொண்டிருக்கின்றார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக்கொண்டிருக்கின்றோம்.

அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
நாம்
‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று
பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
ரத்தம் சொரிந்துகொண்டிருக்கின்றார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக்கொண்டிருக்கின்றோம்

அவர்கள்
சயனைட் அருந்திக்கொண்டிருக்கின்றார்கள்
நாம்
அதர பானம் பருகிக்கொண்டிருக்கின்றோம்

இதில் வியப்பேதும் இல்லை.
அவர்கள் கவிரிமான்கள்
நாம் கவரிகள்.

இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றனர்.
இதோ
ரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன.
இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக்கொண்டிருக்கிறார்கள்.
அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது.
இன்று
ஆசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக்கொண்டிருக்கின்றது.
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கின்றது!
______________

கவிக்கோ அப்துல் ரகுமான்

இழந்த காதல்

நின்று சலித்த என்
தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென
அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்



போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்

நீரில்
இரவெல்லாம்
ஓசையற்று
உடைந்துகொண்டிருக்கிறது
நிலவு
ஒரு
விசும்பலற்று
அழுகின்றன
மீன்கள்
எந்த உராய்வுமற்றுச்
சுழல்கின்றன
நீர் வளையங்கள்
ஏதோ ஒரு மரத்தின்
பெருமூச்சுகளிலிருந்து நீங்கி
நெடுந்தொலைவாய்
பயணம் செய்கிறது ஓரிலை
நீரின்
அத்தனை அமைதிகளும் கூடி
யாருமற்ற கரைநோக்கி
வந்துகொண்டிருக்கிறது
அக் குழந்தையின் உடல்

அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.

“என்ன குற்றம் செய்தீர்கள்” ?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்..


எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.


“என் வருமானத்தைக் கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன்
வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.


“நான் கரி மூட்டை தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”

“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.”

“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்”

“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப் போட்டுவிட்டார்கள்”

“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”
என்று எழுதினேன், “கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.

“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன். நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக்
கொண்டு வந்து விட்டார்கள்”

“சுதந்திர தின விழாவில் ‘ஜன கண மன’ பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச்
சிறையில் அடைத்து விட்டார்கள்”

“அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன்” என்று யாரோ
கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன். “பயங்கரவாதி” என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும்
இல்லாமல் நாடு
அமைதியாக இருந்தது.............................

 
Copyright 2009 kavithai kathalan